பில்லா எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படம்: நயன்தாரா

பில்லா திரைப்படம் நடிப்பதற்கு முன் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்ததாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, உள்ளிட்ட பலருடைய நடிப்பில் கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது என்றே கூறலாம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஸ்டைலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நயன்தாராவும் இதுவரை இல்லாத விதமாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு நடித்திருப்பார். இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா பில்லா படத்தில் நடித்ததற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பில்லா திரைப்படம் என்னுடைய வேறுபரிமாணத்தை காட்டிய படம். இந்த திரைப்படத்தை நான் என்றுமே மறக்க மாட்டேன். ஏனென்றால், இந்த படமும் என்னுடைய வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்திற்கு முன்னதாக நான் கிராமத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடித்து கொண்டு இருந்தேன். பில்லா படம்தான் நான் முழுவதுமாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய காரணமே என்னால் இந்த மாதிரியான கவர்ச்சியான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்ததான். இதன் காரணமாகதான் நான் பில்லா படத்தில் நடித்தேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.