தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். அவர் இன்று காலை திடீரென அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரை மணந்தார். தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் ஆர்த்தி, நடிகர் தருணை தீவிரமாக காதலித்து வந்தார். புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 ஆகிய படங்களில் நடித்தவர் தான் இந்த தருண். ஆனால் அவரோ திவ்யா ரெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விட்டார். இப்போது கொரிண்டகு உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில் இன்று காலையில் ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் வைத்து உஜ்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆர்த்தி. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கியில் வேலை பார்க்கிறாராம். தூரத்து உறவினர்களான இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தார்களாம். இன்று நடந்த திருமணத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். ஆர்த்தி அகர்வால் திருமணத்தை படம் பிடிக்க பத்திரிகையாளர்கள் மீது உஜ்வால் குமாரின் தந்தை சாஷான் அகர்வால் தாக்குதல் நடத்தினார். பின்னர் வெகுநேரம் கழித்து தான் நடந்து கொண்டதற்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் கொஞ்சம் பரபரப்பு நிலிவியது. ஆர்த்தி அகர்வாலின் திருமணம் குறித்து தெலுங்கு திரையுலகின் முக்கியஸ்தர்களுக்கு கடைசி நிமிடம் வரை தெரியாதாம். தான் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் -இயக்குனர்களுக்கே விஷயத்தை சொல்லவில்லை என்பது கூடுதல் செய்தி. இதனால் அவர்கள் இந்த திருமண செய்தியால் அதிர்ந்து போயுள்ளனர்.