30 டிசம்பர், 2014. செவ்வாய்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 27 ஏப்ரல் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

அரசியல் ஆதாயத்துக்காக டெண்டுல்கரை பயன்படுத்துகிறதா காங்கிரஸ்?

புதுடெல்லி, ஏப். 27-
Former cricketers, commentators unsure about 'Sachin Tendulkar MP' - India News Headlines in Tamil

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். 1989-ல் தனது 16 வயதில் கிரிக்கெட் விளையாட வந்த அவர் 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிராக 100-வது சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். விளையாட்டு துறைக்கு அவரது சேவையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் விமர்சனங்கள் எழுந்ததால் வாய்ப்பு நழுவியது.

தற்போது டெல்லி மேல்-சபை எம்.பி.யாக டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு துறையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன எம்.பி. பதவிக்கு டெண்டுல்கர் பெயரை மத்திய அரசு சிபாரிசு செய்தது. அதை ஏற்று எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் நடிகர்கள் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், சுனில் தத் போன்றோரை நியமன எம்.பி. பதவி கொடுத்து பின்னர் அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்தது.

அதேபோல் டெண்டுல்கரையும் அரசியலுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. டெண்டுல்கரின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய மாநில தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையில்,

டெண்டுல்கரை கவுரவப்படுத்துவதாக இருந்தால் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து இருக்கலாம். எம்.பி.யாக நியமித்ததன் மூலம் அவரை காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டது என்றார்.

மராட்டிய பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மாதவ் பண்டாரி கூறும்போது, நான் டெண்டுல்கரின் ரசிகன் என்ற முறையில் அவருக்கு எம்.பி. பதவி கொடுத்ததை வரவேற்கிறேன். அதே சமயம் அரசியல்வாதியாக பார்க்கும் போது அவருக்கு பாரத ரத்னா விருதுதான் கொடுத்து இருக்க வேண்டும். எம்.பி.யாக நியமித்து அவர் மீது காங்கிரஸ் அரசியல் சாயம் பூசி விட்டது என்றார்.

இந்த விஷயத்தில் சிவசேனா கட்சி எந்த கருத்தும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறது. அதன் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டதற்கு பாரத ரத்னாவோ, எம்.பி. பதவியோ அது டெண்டுல்கருக்கும், காங்கிரசுக்கும் இடையேயானது. இதில் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் டெண்டுல்கருக்கு அரசியல் கலந்த எம்.பி. பதவி கொடுத்து இருப்பதை விரும்பவில்லை. பாரத ரத்னா விருது கொடுத்து இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் டெண்டுல்கருக்கு எம்.பி. பதவி வழங்கியதை வரவேற்றுள்ளனர்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், டெண்டுல்கர் சிறந்த விளையாட்டு வீரர். அவருக்கு எம்.பி. பதவி கொடுத்து இருப்பதை வரவேற்கிறேன். பெருமைப்படுகிறேன் என்றார்.

மத்திய மந்திரி அம்பிகா சோனி கூறுகையில், சச்சினுக்கு எம்.பி. பதவி கொடுத்து இருப்பது மிகச்சரியான முடிவு என்றார். இதுபோல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களும் மத்திய மந்திரிகளும் வரவேற்றுள்ளனர்.

பாரத ரத்னா விருதுக்கு டெண்டுல்கர் பெயர் அடிபட்ட போது அதை முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அசாருதீன் மறைமுகமாக எதிர்த்தார். இப்போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

டெண்டுல்கரின் 100-வது சதம் அடிக்கும் முயற்சியில் பலமுறை தோல்வி அடைந்தபோது அவர் ஓய்வு பெறவேண்டும் என்று விமர்சனத்துக்கு ஆளானார். இப்போது அவரது நியமன எம்.பி. பதவியும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

100-வது சதம் அடித்து முடிந்ததும் தன்னை விமர்சித்தவர்களை டெண்டுல்கர் கடுமையாக சாடினார். எனது உடலில் வலு இருக்கும்வரை விளையாடுவேன். ஓய்வு பெறுவது பற்றி நான்தான் முடிவு செய்வேன். யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம் என்று வாயை அடைத்தார்.

தற்போது டெண்டுல்கர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து அவர் விளையாட வேண்டும். ஆட்டத்திறன் குறையும் வரை அவர் ஓய்வு பெறக்கூடாது என்பது ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. அதுவரை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.


Site Meter