முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

தேசியம் (தந்தை மகனுக்கு...)

ஆ.திருநாவுக்கரசன்

ஆகஸ்ட் பதினைந்து
தேசியக் கொடி
தேசமெங்கும் ஏற்றினோம்
தேசியத்தைக் கொஞ்சமேனும்
மனதில் ஏற்றினோமா?
எடுக்கவில்லை
ஆனாலும்
கொடுத்தோம் உயிர்களை!

கைகள் சோறும்வரை
சுழன்றடித்த கைத்தடிகள்;

தீரும் வரை சுடப்பட்ட
துப்பாக்கிக் குண்டுகள்;

கணக்கில் வராமலேயே
செத்துப்போன தியாகிகள்;

நடந்து நடந்து களைத்து
கொப்பளம் பொங்கிய கால்களோடு
உப்பளம் நோக்கி நடந்தனர்
உள்நாட்டு வளம் அனைத்தும்
உள்நாட்டுக்கே என முழங்கி

இன்றும் முழங்குகிறோம்
தேசியம்!

காலருக்கு மேல் இருக்கும் மூளையை
டாலருக்கு விற்றுவிட்டு
இன்றும் முழங்குகிறோம்
தேசியம்!

மழைநீர் சொத்தில்லை
மழலைகள் சொத்தில்லை
விவசாயம் சொத்தில்லை - அரிய
விலங்கினம் சொத்தில்லை
கனிவளம் சொத்தில்லை - உள்நாட்டு
மனித வளமும் சொத்தில்லை
இவர்களுக்கு
டாலர் மட்டுமே சொத்து.

தேய்வன வரிசையில்
தேசியத்துக்கு முதலிடம்
வளர்வன வரிசையில்
சுரண்டலுக்கு முதலிடம்!

கோசம் போட்டு
கோசம் போட்டு
வேசம் போடுதலே
இன்றைய
தேசப்பற்று!

தேசியக் கொடி உண்டு
தேசிய மலர் உண்டு
தேசியப் பறவை உண்டு
தேசிய மிருகம் உண்டு
தேசிய மனிதன் யாரடா?
தேசியம் போற்றும்
மனிதன் யாரடா?

தண்­ணீரில் விழுந்த
சுண்ணாம்புக் கல்லாய்
தகிக்கிறது என் மனது - இந்த
தன்னலம் கண்டு!

உன்னிலிருந்தாவது பிறக்கட்டும் - ஒரு
உண்மையான தேசியம்!

கவிதை தொகுப்பு

Site Meter