நான் அவன் இல்லை இரண்டாம் பாகத்தில் லஷ்மி ராய்க்கு செமத்தியான ரோலாம். பனி மழையில் அவர் நனைந்து ஆடிப் பாடியிருக்கும் பாடல் அனைவரையும் கவரும் என்கிறார் இயக்குநர் செல்வன். அந்தக் காலத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பில் வெளியாகிய படம் நான் அவன் இல்லை. அப்படத்தை அதே பெயரில் இந்தக் காலத்து இளசுகளை அடிப்படையாகக் கொண்டு மறுபடியும் படைத்து பரவசப்படுத்தியவர் செல்வன். நான் அவன் இல்லை ரீமேக்குக்குக் கிடைத்த வரவேற்பால் இப்போது ஏகப்பட்ட பழைய படங்களை தூசு தட்டி எடுத்து ரீமேக்கிக் கொண்டிருக்கிறது கோலிவுட். இந்த நிலையில் நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்கின் தொடர்ச்சியை உருவாக்கி முடித்துள்ளார் செல்வன். அதே நேமிசந்த் ஜபக் தயாரிக்க, ஜீவன் நடிக்க புத்தம் புதிய ஐந்து நாயகிகளை வைத்து முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பை முடித்திருக்கிறார் செல்வன். சங்கீதா, லஷ்மி ராய், ஸ்வேதா மேனன், ஹேமமாலினி, ரச்சனா ஆகியோர் ஜீவனுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். லஷ்மி ராய் சுவிட்சர்லாந்தில் நிஜமான பனி மழையில் ஆடிப் பாடியுள்ள பாடல் அருமையாக வந்திருக்கிறதாம். ரசிகர்களை இந்தப் பாடல் மூலம் வசிகரிப்பார் லஷ்மி ராய். இதில் சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார் என்கிறார் செல்வன். படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். பிந்தைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.