முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது. சினிமாக்காரர்களுக்கு முதல்வர் கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 6-ந் தேதி சென்னையில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கிறது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி ஒளிபரப்பு செய்கிறது. முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமிதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, ப்ரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம். இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில கதாநாயகன்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.