வெளுத்துகட்டு படத்துக்காக நிஜ பிள்ளையார் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஊர்மக்களின் வழிபாட்டுக்காக வழங்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் படம் வெளுத்துகட்டு. சேனாபதி மகன் இயக்குகிறார். இப்படம் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது: கிராமம், நகரம் இரண்டும் கலந்த கதை இது. புதுமுகங்கள் கதிர்-அருந்ததி நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். தான் காதலிக்கும் பெண்ணுக்காக கதாநாயகன் சொந்தமாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இதற்கான செட் அமைக்க நினைத்தோம். பிறகு நிஜகோயில் கட்ட முடிவு செய்தோம். அதற்கான அனுமதியை அப்பகுதி மக்கள் வழங்கினார்கள். மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் பிள்ளையார் கோயிலை முறையான பரிகாரங்கள் செய்து கட்டினோம். பிரபல 11 குருக்கள் ஹோமம் வளர்த்து சுபமுகூர்த்த நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு முடிந்தபிறகு வழிபாட்டிற்காக கோயிலை அப்பகுதி மக்களிடம் ஒப்படைத்தேன். ஏற்கெனவே இதே படத்துக்கு 30 அடி உயர அய்யனார் சிலை உருவாக்கி அதை திண்டுக்கல்லில் உள்ள செடிபட்டி மக்களின் வழிபாட்டுக்காக வழங்கினேன். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறார் என்று கூறினார்.