வேடப்பன் படத்துக்காக 30 ஏக்கரில் மல்லிகை பயிரிடப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. டி.ஆர்.கே மூவீஸ் சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் படம் வேடப்பன். ஹேமந்த்குமார், நிகிதா, அப்ஸரா நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் ஆனைவாரி ஏ.ஸ்ரீதர் கூறியதாவது: 30 நாட்களில், ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தோம். ஒரு நடிகையை அவரது தீவிர ரசிகனே சுட்டுக் கொல்கிறான். ஏன் எதற்கு என்பதுதான் கதை. ஆக்ஷன், திகில், சென்டிமென்ட் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. 15 வருடத்துக்கு முன்பு இளையராஜா இசையமைத்த பாணியில் மல்லி வச்சா மார்கழி... என்ற பாடலை இசை அமைப்பாளர் நேசன் உருவாக்கி உள்ளார். இந்த பாடல் படத்தில் பேசப்படுவதாக இருக்கும். இதற்காக 30 ஏக்கரில் படப்பிடிப்புக்கு ஏதுவாக திட்டமிட்டு மல்லிகை பயிரிட்டு படமாக்கி இருக்கிறோம். அடுத்த மாதம் படம் வெளியாகிறது. இவ்வாறு கூறினார்.