கொலை-கொள்ளை சம்பவங்களை நடத்தி வரும் ஒரு கும்பலையும், அவர்களின் கூட்டாளிகளையும் பிடிக்க, ஒரு தனிப்படை அனுப்பப்படுகிறது. அந்த தனிப்படையின் பெயரில், வேறு ஒரு சட்டவிரோத கும்பல் மக்களை துன்புறுத்தி, பெண்களை மானபங்கம் செய்கிறது. இவைகளை கண்கூடாக பார்க்கும் ஒரு துடிப்புமிக்க இளைஞன், காவல் துறையினருடன் கைகோர்த்து, அந்த கும்பலை பிடிக்க முயற்சிக்கிறான். அவனுடைய முயற்சி வெற்றிபெற்றதா, இல்லையா? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் வகையில், "தம்பி ஊருக்கு புதுசு" என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் புதுமுகம் சந்தோஷ் கதாநாயகனாகவும், புதுமுகம் தனுஸ்ரீ கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். "கஜினி" பட வில்லன் ராணா பிரதாப்ராவ் வில்லனாக நடிக்கிறார். இவர்களோடு மும்பை மாடல் அழகி மிஸ்டி முகர்ஜியும் நடிக்கிறார். உமாசங்கர் ஒளிப்பதிவு செய்ய, பூபேஷ்குமார் இசையமைக்கிறார். கதை-திரைக்கதையை ஜெகதீஸ் எழுத, வசனம்-பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகம் ஆகிறார், தணிகை பாரதி. கன்னட பட அதிபர் "ஆனைக்கல்" பால்ராஜ் முதன்முதலாக தமிழில் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர், கன்னடத்தில் 12 படங்களை தயாரித்தவர். ஸ்வேதா என்டர்பிரைசஸ் சார்பில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு சத்தியமங்கலம், கோபிநத்தம், கோவிந்தம்பாடி, கொளத்தூர், அந்தியூர், மேட்டூர், உளுந்தூர்பேட்டை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.