(06 Mar 2010)விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை
வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், த்ரிஷா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி: சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது
சென்றிருக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே? கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் நான் நடித்தேன். படத்தில் சிம்புவைவிட, வயதில் மூத்த பெண்ணாக நடித்திருக்கிறீர்களே? அதற்காக நான் இயக்குனருடன் சண்டை
போட்டேன். அவர், என்னை சமாதானப்படுத்தினார். அப்படி ஒரு காம்பினேஷன் நல்ல க்யூட்டாகவும் இருந்தது. அதனால்
நடிக்க ஒப்புக்கொண்டேன். கேரள கிறிஸ்தவப் பெண்கள் யாரையாவது பார்த்து அவர்கள் பழக்க வழக்கங்களை கற்றுக்
கொண்டீர்களா? இல்லை. கௌதம் மேனன் சொன்னதைக் கேட்டு நடித்தேன். அவர் சொன்ன சில விஷயங்களில் எனக்கு
முதலில் சம்மதமில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னதுதான் ஜெயித்தது, என்றார் த்ரிஷா.
(06 Mar 2010)கோகுலம், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட தரமான படங்களைத் தயாரித்த ஹென்றியின் புதிய
தயாரிப்பு வந்தேமாதரம். மம்முட்டி, அர்ஜுன், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தயாரிப்பாளர் ஹென்றி கூறியது: தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு முதலில் அறுவடை என்ற பெயரை வைத்திருந்தோம். பிறகு வந்தேமாதரம் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளோம். அரவிந்த்ராஜ் படத்தை இயக்கியுள்ளார். இதில் விவசாயிகளின் பிரச்சினைகளையும் தீவிரவாதப் பிரச்சினைகளையும் பற்றி அலசி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வைக் கூறியிருக்கிறோம். மம்முட்டியும் அர்ஜுனும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். சினேகா பெண் விமானியாக நடித்துள்ளார். படத்தில் இடம்பெறும் அதி நவீன மருத்துவமனை மற்றும் சிறைச்சாலைக் காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். படத்தின் பரபரப்பான வசனங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். வைரமுத்து எழுதிய தாய்நாடு... எனத் தொடங்கும் தேச பக்திப் பாடலை 10 பிரபல பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர். ஜனரஞ்சகப் படங்களுக்கேயுரிய கலை அம்சங்களுடன் தரமான படைப்பாக உருவாகியுள்ள வந்தேமாதரம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது, என்றார் தயாரிப்பாளர் ஹென்றி.
(06 Mar 2010)விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் வாலிபன். இளமையான காதல் கதை கொண்ட
இப்படத்தை, சிம்பு, இயக்கி நடிக்கிறார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். சிம்பு ஜோடியாக நடிக்க, சரத்குமார் மகள் வரலட்சுமி மற்றும் ஸ்ருதி ஹாசனிடம் பேசி வருகின்றனர். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே துவங்குவதாக இருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் புரமோஷன் வேலைகளில் சிம்பு இருந்ததால் தொடங்கவில்லை. இதையடுத்து இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மார்ச் 25ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதில், காதல் கதையுடன் நாட்டுப்பற்று மிகுந்த ஒரு மெசேஜ் இருக்கும் என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன.
(06 Mar 2010)மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ராவணா படம் ஜூன் 18ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். தமிழில் விக்ரம் கதாநாயகனாகவும், இந்தியில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்தி ராவணாவில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ளது. படத்தின் இதர பணிகள் நடந்த வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் தமிழ் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளிவரும் நாள் தள்ளி போனதையடுத்து, இறுதியில் ஜூன் 18ல் படம் வெளியாகும் என பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
(06 Mar 2010)கலைஞானி கமல் மய்யம் என்ற பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தி வந்தார். தனது ரசிகர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான் அவரது பேரார்வம். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் தமிழறிஞர்களை வரவழைத்து அவர்களின் சொற்பொழிவை வலுக்கட்டாயமாகவாவது கேட்க வைப்பது அவரது வழக்கம். என்ன காரணத்தாலோ மய்யம், புத்தகக் கடைகளில் மையம் கொள்ளாமல் போனது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த இதழை மின் இதழாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கமல். இந்த முறையும் எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் இந்த மய்யத்தில் உலா வர வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. முதல் கட்டமாக தமிழறிஞர்களின் பேட்டியை படம் எடுக்க விரும்பினாராம். தானே இந்த பேட்டியை எடுத்தால் இன்னும் உற்சாகமாக இருக்கும். வாசகர்களுக்கும் அது புத்துணர்ச்சியை தரும் என்பதால் நேரம் ஒதுக்கி எழுத்தாளர்களை தேடி செல்ல ஆரம்பித்திருக்கிறார். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்ல. கேரள எழுத்தாளர்களையும் தேடி செல்லப் போகிறாராம். முதலில் கமல் பேட்டியெடுத்த எழுத்தாளர் நீல.பத்மநாபன்.









