2012-ம் ஆண்டில் உலகம் அழியும் என "ஹாலிவுட்" படங்கள் கூறிவரும் வேளையில், அப்படி ஒரு அழிவிற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்ல வருகிறது, ஒரு தமிழ்ப்படம். அந்த படத்தின் பெயர், "சரவண பவ." கலியுக கடவுள் கந்தனின் அவதாரத்தாலும், அருளாலும் உலக அழிவு தடுக்கப்படும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்தப் படம். பூர்வ ஜென்மம், பில்லி-சூன்யம், மாந்திரீகம் ஆகியவை உலகில் இருந்தாலும், அவைகளுக்கு தீர்வும் உண்டு என்பதை கதை சித்தரிக்கிறது. "சரவண பவ" படத்தில் பாலமுருகனின் அவதாரமாக மாஸ்டர் கதாமா சபரீஸ்வரன் நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் சதீஷ், செல்வராஜ், பாரதி, தேசிங்குராஜா, காளை, மீனாட்சி மைந்தன், தீபா உள்ளிட்டவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, இந்தியன் இசையமைக்கிறார். மீனாட்சி மைந்தன் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இவர்தான் படத்தில் மந்திரவாதியாகவும், சாமியாராகவும் இரட்டை வேடம் கட்டியிருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார், ஆதவன். மூலக்கதை-தயாரிப்பு: அந்தமான் டி.ஆர்.எஸ்.ரமணி அய்யர் சுவாமிகள். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.
நட்புக்கும், காதலுக்கும் முடிச்சு போட்டு, 'வாடா போடா நண்பர்கள்" என்ற புதிய படம் தயாராகிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் மணிகை, இந்த படத்தின் மூலம் இயக்குநராகிறார். மகேஷ் முத்துசுவாமியிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த அருண் ஜேம்ஸ் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். மும்பை திரைப்பட கல்லூரி மாணவர் சித்தார்த், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். 'புகைப்படம்" படத்தில் கதாநாயகனாக நடித்த நந்தா, பிரகாஷ்ராஜின் 'இனிது இனிது" படத்தில் நடித்த ஷரன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த யஷிஹா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஸ்ரீநாத், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். 8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த பி.அருமைச்சந்திரன் தயாரிக்கிறார். படம், வேகமாக வளர்ந்து வருகிறது.
கதாநாயகர்களுக்கு நண்பராகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் ஸ்ரீமன், "அரக்கோணம்" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது, "சஸ்பென்ஸ்" கலந்த திகில் படம். நகரில், ஒரு கொலை விழுகிறது. அந்த கொலையை செய்த கொலையாளி யார்? என்று போலீஸ் கண்டுபிடிக்கும் முன்பே அடுத்த கொலை விழுகிறது. இப்படி, அடுக்கடுக்காக மர்மமான முறையில் பல கொலைகள் விழுகின்றன. கொலையாளி யார்? என்று தெரியவரும்போது, எதிர்பாராத அதிர்ச்சி ஏற்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திகில் படத்தில் ஸ்ரீமனுடன், மும்பை அழகி பிராச்சி தேசாய் கதாநாயகியாக நடிக்க, புதுமுகம் சந்துரு, பொன்னம்பலம், சுமன் ஷெட்டி, வாஹினி, வெங்கல்ராவ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை-திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் சிங்கம் சுதாகர் ரெட்டி. பி.எஸ்.விஷுவல்ஸ் சார்பில் அரக்கோணத்தைச் சேர்ந்த ரமணா, சுப்பிரமணியம், சிங்கம் சுதாகர் ரெட்டி ஆகிய மூன்று பேரும் தயாரித்துள்ளனர். அர்ஜூன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குணா ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெறுகின்றன.
மது மாண்டேனா, ஷீத்தல் வினோத் தல்வார் சார்பில் சினெர்ஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ரத்த சரித்திரம். இந்தியில் சூர்யா முதன்முதலில் நடிக்கும் இப்படத்தை அடிதடிக்கு பேர்போன ராம்கோபால் வர்மா இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இயக்குகிறார். சூர்யாவுடன் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆந்திராவில் இரு ரவுடிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தைதான் ரத்தகளரியாக சொல்லியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. ரவி என்கிற மனிதரின் வளர்ச்சி, அதிகாரம், அரசியல் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும், ஆந்திராவில் ராமா நாயுடு ஸ்டுடியோ அருகே ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் சூரி என்ற மனிதரை பற்றி அறிந்து கொண்டு, அந்த சம்பவத்தையே படமாக்கும் நோக்கில் சூரியின் பழிவாங்கும் உணர்வு, தண்டனைக்காக அடைக்கப்பட்ட சிறையிலும் தணியாமல் இருந்ததையும், சிறையிலிருந்தபடியே ரவியை பழிவாங்கும் முயற்சியில் சூரி வெற்றி பெற்றதையும், இந்த படத்திற்காக ரவி, சூரி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினார் ஆர்.ஜி.வி. சூரியின் குடும்பத்தையும் சந்தித்து உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார், அனந்தப்பூர் சிறையில் இருக்கும் சூரி என்கிற அந்த பிரபல ரவுடியையும் நேரில் சந்தித்து பல விஷயங்களை கறந்து அதை அப்படியே படத்தில் இணைத்திருக்கிறார். இப்படத்தில் 'மடலசெருவு சூரி'யாக சூர்யாவும், 'பரிதல ரவி'யாக விவேக் ஓபராயும் நடித்திருக்கிறார்கள். ப்ரியாமணி, ராதிகா ஆப்டே, சத்ருஹன் சின்ஹா, சுபாரத் தத்தா, ஆஷிஷ் வித்யார்த்தி, சுதீப், ஜரினா வாகாப், ராஜ் பாப்பர், ரஞ்ஜித் மற்றும் பலர் நடித்திருக்கும் இபபடத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருக்கிறார். நிபுன் குப்தா படத்தொகுப்பை கவனிக்க, அமல் ரத்தோட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆகஸ்ட் வெளியீடு என்று டிரெய்லர்கள் வெளிவந்தாலும் படம் செப்டம்பர் 17ல் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
டாக்டர் சீனிவாசன் கதாநாயகனாக நடித்து இயக்கும் படம் "லத்திகா". எழுபது சதவீத படம் முடிவடைந்த நிலையில் டாக்டர் சீனிவாசன் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்... இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாசத்தை சொல்லும் படம். அன்பான கணவன், அழகான மனைவி, செல்ல மகன் என்று மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தில் பிரச்சினை வில்லன் ரூபத்தில் வருகிறது. பிரச்சினை உச்சக் கட்டத்துக்கு செல்லும் போது குழந்தையை கடத்துகிறான் வில்லன். கடத்தப்பட்ட குழந்தையை வில்லனிடமிருந்து கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. ஒரே நேரத்தில் நடிப்பும், இயக்கமும் சேர்த்து கவனித்தாலும் சினிமா மீதுள்ள காதலால் எனக்கு நானே ஒரு சவால் விடுத்துக் கொண்டு பணியாற்றுகிறேன். எனக்கு ஜோடியாக மீனாட்சி கைலாஷ் நடிக்கிறார். வில்லனாக ரகுமான் நடிக்கிறார். இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி படம் பார்க்கும் ரசிகர்களை உருக வைக்கும். இந்தப் படத்தை குறுகிய காலத்தில் இயக்கியிருக்கிறேன் என்றால் கதை, திரைக்கதை, வசனம், இசை, இணை இயக்கம் பொறுப்பை ஏற்றிருக்கும் ராம் பரதசக்கரவர்த்திதான் காரணம். என்னுடைய தேவையைப் புரிந்து கொண்டு மிகச் சரியாக என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார், என்கிற டாக்டர் சீனிவாசன் இந்தப் படத்துக்குப் பிறகு "வாசன் ஐ.பி.எஸ்", "பாண்டிசாமி", "கலியுலக கண்ணன்", "வைஷ்ணவி" படங்களில் நாயகனாகவும் "அவனா இவன்" படத்தில் நெகடிவ் ரோலிலும் நடிக்கிறார்.