(3/15/2010)
"படையப்பா", "ஆறுமுகம்" ஆகிய படங்களில் வில்லி வேடங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மேலும் ஒரு புதிய படத்தில் வில்லியாக நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், கம்பன். இதில், கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற சத்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சண்டிகார் அழகி நவரத்னா. இவர்களுடன் சுமன், சரண்ராஜ், கோட்டா சீனிவாசராவ், டி.பி.கஜேந்திரன், வெ.ஆ.மூர்த்தி, செந்தில், பாண்டு, வையாபுரி, சாப்ளின் பாலு, பெசன்ட்நகர் ரவி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வணிகமயமாகி விட்ட கல்வியின் நிலைக்கு எதிரான கதை இது. படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், என்.முரளிசாமி. குணா ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைக்கிறார். சத்யாலயா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சத்யா பாஸ்கர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, தொடர்ந்து சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
(3/15/2010)
டென்னிஸ் வீராங்கனையான இந்திரா ஒரு போட்டிக்காக கேரளா செல்கிறாள். அங்கு அவள் திடீரென காணாமல் போகிறாள். அவளை கடத்தியது இளம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல் என தெரிய வருகிறது. இந்திராவின் பாசக்கார அப்பா சேனா, எப்படி கடத்தல்காரர்களை துவம்சம் செய்து மகளை மீட்கிறார் என்பதுதான் "இந்திரசேனா" படத்தின் கதை. இதில் சேனா என்னும் அப்பா பாத்திரத்தில் டாக்டர் சீனிவாசன் நடிக்க, மகள் இந்திராவாக தர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், யுவராணி, ரேகா, தமிழரசன், வையாபுரி, பாபுகணேஷ், விஜயகுமார், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், சீதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பஞ்ச் பரத் இயக்கி வருகிறார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இவர் இயக்கும் முதல் படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக ஒரு வாரம் ஒத்திகை நடத்தப்பட்டு அதன் பிறகுதான் படப்பிடிப்பை துவக்கியுள்ளனர். "நாடோடிகள்" படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நாகு இப்படத்திலும் ஒரு நடனம் ஆடியுள்ளார். காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பார்த்து அப்பா-மகள் பாசப் பிணைப்பு வலுப்பெறும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் பஞ்ச் பரத். சென்னை, பாண்டிச்சேரி, கொச்சி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்துள்ளது. படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது. இசையமைத்திருப்பவர் வி. தஷி. சில கன்னட படங்களில் பணியாற்றிய ஜெய்சிங் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். கலை: வினோத், நடனம்: காதல் கந்தாஸ், கதை-திரைக்கதை-வசனம்-ஸ்டண்ட்-இயக்கம்: பஞ்ச் பரத். "பாபா சினி கம்பைன்ஸ்" சார்பில் இப்படத்தை தயாரிப்பவர் எஸ்.துரியா.
(3/13/2010)
இயக்குனர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தனது 57-வது தயாரிப்பாக, "கிருஷ்ணலீலை" என்ற படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து வினய் நடிக்கும் "நூற்றுக்கு நூறு" படத்தை தயாரிக்கிறது. இதற்கிடையில், குறுகிய கால தயாரிப்பாக, "முறியடி" என்ற புதிய படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யா நம்பீசன், ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். புஷ்பா கந்தசாமி தயாரிக்கிறார். சமீபகாலமாக தமிழ் பட உலகில் வித்தியாசமான திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில்கொண்டு, இந்த படம் தயாராகிறது. வேகமாக ஓடும் இன்றைய வாழ்க்கையில், அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது அபூர்வமாகி விடுகிறது. தேவன் என்ற சாதாரண மனிதன் செய்த உதவியால், என்ன நடக்கிறது? என்பதே இந்த படத்தின் கரு. தேவன் கதாபாத்திரத்தில், சத்யராஜ் நடிக்கிறார். சமூக விரோதிகள் தீட்டும் திட்டத்தை முறியடிக்க போராடும் இளைஞராக, கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த டி.வி. நிருபராக, ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு, செங்கோட்டை ஆகிய இடங்களில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
(3/13/2010)
ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிடும் படம் "அசோகவனம்". மணிரத்னத்தின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவாக்கப்படும் இப்படம் தற்காலிக ராமாயணத்தை நினைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருதிவிராஜின் தங்கையை விக்ரம் சிறை பிடித்துவிடுகிறார் தன் இதயத்தில்... ஆனால் விக்ரமுக்கு மனைவி உண்டு. அது யார்-? அவர்தான் ஜஸ்வர்யா... கதை சுருக்கம் அது என்னவென்றால், விக்ரமுடைய மனைவியை பிருதிவிராஜும், பிருதிவிராஜின் தங்கையை விக்ரமும் களவாடுகிறார்கள்... கொஞ்சம் குழப்பமா இருக்கா? படம் வந்தா புரியும்... இந்த படத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று! தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது இப்படம். இந்தியில் ராவண் என்ற பெயரில் தயாராகிறது. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அசோகவனத்தின் ராமனாக நம்முடைய சீயான் விக்ரம் நடிக்கிறார். பிருதிவிராஜ் ராவணனாகவும், ஐஸ்வர்யா ராய் சீதாவாகவும், ப்ரியாமணி சூர்ப்பனகையாகவும், நடிக்கின்றனர். கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி இதில் தேவி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். விக்ரம்-ஐஸ்வர்யா ராய் ஜோடிசேரும் முதல் படம் இது. இந்தியில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு கேரளாவில் கொச்சி அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் முழுங்குழி, மலையாட்டூர் போன்ற வனப்பகுதியில் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு உ.பி.யில் உள்ள ஜான்சிலில் நடந்தது. இந்த படத்தில் நிறைய மிருகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் யானையை நடிக்க வைத்தபோது அது பாகன் ஒருவனை கொன்ற சம்பவமும் நடந்தது. காளைகள், குதிரைகள், யானைகள் மட்டுமின்றி நாய்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து உயர்ரக நாய்களை வரவழைத்திருக்கிறார்கள். மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இந்தப்படம் மூலம் தொடர்ந்திருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்! நடிகை ஷோபனா நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். காலத்தையும், காதலையும் கலக்கும் நடனங்களாக அவை அமைந்திருக்கிறது. வி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். இப்படத்தின் மூலம் நடிகை சிம்ரன் உதவி இயக்குனராக புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார். இதையடுத்து தமிழ்த் திரையுலகை இயக்குனர் சிம்ரன் அடுத்த வருடம் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் அசோகவனம் மே மாதம் திரைக்கு வருகிறது.
(2/27/2010)
மோகன்லால், பாவனா, ஷோபனா நடித்து கேரளாவில் 100 நாட்கள் ஓடிய படம், "சாகர் அலைஸ் ஜாக்கி". இந்த படம், "வெற்றி நடை" என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், தாதாக்களை ஒழிக்கும் வீரராக மோகன்லால் நடித்து இருக்கிறார். ஆயுதம் மற்றும் போதை மருந்து தொழில் நடத்தும் தாதாக்களை, மோகன்லால் தனித்து நின்று எப்படி ஒழித்துக்கட்டுகிறார் என்பதே கதை. மோகன்லால், பாவனா, ஷோபனாவுடன், சுமன், மனோஜ் கே.ஜெயன், நெடுமுடி வேணு, ஜெகதி ஸ்ரீகுமார், பாலா, சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார், ஜோதிர்மயி. படத்தின் கதை-திரைக்கதையை எஸ்.என்.சுவாமி எழுத, சாய் ஸ்ரீனிவாஸ் வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு-இயக்கம்: அமல் நீரத். இசை: கோபி சுந்தர். படத்தொகுப்பு: விவேக் ஹார்சன். பல படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள கே.எஸ்.சீனிவாசன், உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த எஸ்.ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து ஓம் ஸ்ரீ சாய் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: ராஜேஷ் கே. இதில் ஜாக்கி பாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். மலையாள வாசனையே தெரியாத அளவிற்கு கதைக்களமும், பிரம்மாண்ட காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் தமிழில் நன்கு அறிமுகமானவர்கள். தற்போது படத்தின் பின்னணி குரல் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதத்தில் திரைக்குக் கொண்டு வர முழு வீச்சில் வேலைகள் நடந்து வருகின்றன.









