சத்யம்
(Sathyam)
நடிப்பு : விஷால், நயன்தாரா, கோட்டா சீனிவாசராவ், உபேந்திரா மற்றும் பலர்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : விக்ரம் கிருஷ்ணா
இயக்கம் : ஏ.ராஜசேகர்
சட்டம் ஒருபோதும் தோற்றுப்போகாது என்பதை சொல்லும் படம்தான் சத்யம். விஷாலும் தன் காக்கி சட்டை ஆசையை சத்யம் மூலம் நிறைவேற்றிவிட்டார்.
பதவிக்கு ஆசைப்படாதா அரசியல் தலைவர்களும் உண்டோ! ஆம் முதல்வர் பதவிக்காக மூன்று அமைச்சர்களை போட்டுத்தள்ளிவிடுகிறார் அமைச்சர் கோட்டா சீனிவாசராவ். ஆனால் அதற்கு முன்னதாகவே தான் நினைத்தமாதிரியே மூன்று அமைச்சர்கள் கொல்லப்படுகிறார்கள்.
யார் கொலைசெய்தது என்று வில்லன் விழித்துக் கொண்டிருக்கும் வேளையில், போலீஸ் துறையும் சூடாகிப்போகிறது. அசிஸ்டெண்ட் கமிஷனரான விஷாலிடம் இந்த கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அப்புறமென்ன எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
நீண்ட தேடலுக்கு இடையில் குற்றவாளி பிடிபடுகிறான். அவன் வேறு யாருமல்ல விஷால் காக்கிச் சட்டைபோட காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிதான். "சட்டம்தான் தண்டிக்கனும், சாமிதான் கண்ண குத்தனும்" என தனக்கு சொல்லிக் கொடுத்த இவரா இப்படி, என அதிர்ச்சியடைகிறார் விஷால். குற்றவாளியை சட்டம் தண்டித்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி என்பதால் செய்யப்பட்ட அதிகப்படியான எக்சர்சைஸ், விஷாலின் முகத்தை அப்படியே மாற்றியிருக்கிறது. அனல் பறக்கும் கண்கள், யாருக்கும் பணியாத நேர்மை என காக்கிசட்டைக்கு மட்டுமின்றி தனது கதாபாத்திரத்திற்கும் மெருகேற்றியிருக்கிறார். இருந்தாலும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ளும் ஒரு போலீஸ்காரன் என்னும் பழைய கான்செப்ட் விஷாலின் உழைப்பை வீணாக்கியுள்ளது. சண்டைக்காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டரே அஞ்சுகிற அளவுக்கு பாய்ந்திருக்கிறார். குறிப்பாக அந்த கார் சேஸ்.
ஒரே அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் டி.வி நிருபர் நயன்தாராவுக்கும் விஷாலுக்கும் காதல். தான் பார்க்கும் வேலையைக்காட்டிலும் விஷாலின் முத்தத்திற்காக நேரம் ஒதுக்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் கிளாமருக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் குழந்தைகளுடன் மோதி, நயன்தாரா வாங்கிக் கட்டிக் கொள்வது பார்க்க சகிக்கல... எதுக்குங்க நீங்கெல்லாம் ரிஸ்க் எடுக்கிறீங்க...
சட்டத்தை நேசிக்கும் போலீஸ் அதிகாரியாக இருந்து கொலைகாரனாக மாறும் உபேந்திரா வரும் காட்சிகள் சூப்பர். சில காட்சிகளே வந்தாலும், நடிப்பை ஜெயித்திருக்கிறார். ரவிகாலே, பிரபுநேபால் வில்லத்தனங்கள் பார்த்து, சலித்துப்போன விஷயங்கள். முதலமைச்சர் ஆவதற்கு பிளான் போடும் கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல வாழ்த்துகளை வாங்கிக்கொள்கிறார். பிரேம்ஜி... இந்த மாதிரி கேரக்டர் படத்திற்கு வேஸ்ட்!
"போலீஸ்ங்கிறவன் சுடுகாட்டிலே எரியுற பிணம் மாதிரி. விறைச்சு எழுத்தாலும், அடிச்சு படுக்க வச்சிடுவாங்க", "எங்கேயோ தொலைஞ்சு போயிடுச்சுன்னு சொல்றதுக்கு நான் அம்பது, நூறு இல்ல" இப்படி வசனங்களில் படத்தை வாழ வைத்திருக்கிறார் குணசேகரன்.
ஹாரிஸ்.. என்னாச்சுப்பா இவருக்கு. சில பாடல்கள் மட்டும் கேட்க முடிகிறது. கார் சேஸிங் காட்சிகளில் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரமிப்பு. ஸ்டன்ட் சிவாவின் சண்டைக்காட்சியில் செயற்கைத்தனம் தெரிந்தாலும் பிரமாண்டம்.
பிரமாண்டத்தை காட்சியில் வைத்த இயக்குனர், கதையிலும் கொஞ்சம் கவனம் வைத்திருந்தால் சத்யம் வென்றிருக்கும்...









