
வழக்கம்போல ஹரி படம் இருக்கும் என்றால், இது கொஞ்சம் வித்தியாசம். காதலியை எதிரிகளிடமிருந்து காப்பாற்றத் துடிக்கும் இளைஞனின் கதை.
பூ வியாபாரியாக இருக்கும் ராஜேஷின் மகன் பரத். இவரது வேலையே ஊர்வம்பு, அடிதடி என்று வெட்டியாக பொழுதைக் கழிப்பது. இந்த நிலையில் கோயில் குருக்களின் மகளான பூனம் பஜ்வா மேல் ஒரு கண். ஆனால் நாயகி, பரத்திற்கு ஒரு பரிட்சை வைக்கிறார். அதன் மூலம் பொறுப்புள்ள இளைஞனாக மாறுகிறார் பரத். அடுத்தது என்ன பூனம் மனசுக்குள்ளும் காதல் பூ பூத்தாச்சு.
பூனம் பஜ்வாவின் அக்காவாக சிம்ரன். இவரை திடீரென புற்றுநோய் தாக்க, அத்தானுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்கின்றனர் பூனத்தை. அத்தானும் விபத்தில் இறந்துவிட, கொழுந்தன் கிருஷ்ணா, வில்லன் சம்பத்ராஜ் ஆகியோர் நாயகியை துரத்த ஆரம்பிக்கின்றனர். இவர்களிடமிருந்து காதலியை பரத் காப்பாற்றுவதே கதை.
கிராமத்து இளைஞனாக வரும் பரத், அதே கெட்டப்பில் அசலாக நடித்திருக்கிறார். மேலும் நெல்லை மொழி பேசி தனது நடிப்பை முழுமை செய்திருக்கிறார். கூடுதலாக காமெடியிலும் கலக்கியிருக்கிறார். காதலியின் சந்தோஷத்திற்காக உருகும் காட்சியிலும் நம்மை கலங்கடிக்கிறார்.
பூனம் பாஜ்வா அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். இமேஜ் பார்க்காமல் மொட்டை போட்டு நடிக்க ஒத்துழைத்திருக்கும் புதுமுகம் பூனம் பஜ்வாவை பாராட்டலாம். அடுத்த ரவுண்டுக்கு தயாராகியிருக்கும் சிம்ரனுக்கு இதில் நாயகியின் அக்கா வேடம். பரத் தன்னிடம்தான் காதலை சொல்லவருகிறார் என நினைத்து அவர் காட்டும் ரியாக்ஷன் ரசிக்க வைக்கிறது. புற்றுநோய் வந்து நொறுங்கிப்போகும் இடத்தில் அனைவரையும் கலங்க வைக்கிறார்.
வடிவேலுவுடன் பரத் அடிக்கும் காமெடி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. காதல் தூதுவிட சிம்ரனை துரத்தும் இடங்களில் எழும் சிரிப்பை அடக்க வெகு நேரமாகிறது. ஒய்.ஜி., ராஜேஷ், கிருஷ்ணா, சம்பத்ராஜ் ஆகியோரும் தங்களது கேரக்டரை முழுமையாக செய்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் "துளசி செடிய..." "தாயாரம்மா தாயாரு..." பாடல்களை கேட்கலாம். பிரியனின் இயற்கை ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கண்களுக்கும் குளிர்ச்சி.
பிளாஷ் பேக்கில் திரும்ப திரும்ப காட்சிகள் வருவதும், திரைக்கதை தெளிவில்லாமல் இருப்பதும் சேவலை சிலிர்க்கவிடவில்லை. சில இழுவையான காட்சிகளை குறைத்திருந்தால் இன்னும் வேகமாக கூவியிருக்கும் இந்த சேவல்.