நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் நாட்டின் குடிமக்களை தாக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் குடிமக்களைத் தாக்கும் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று குடிமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஜோரியில் இன்று புதன்கிழமை ராணுவ வீரர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “நீங்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். எத்தகைய போரிலும் ஈடுபட்டு, வெற்றியடையும் திறன் நம்மிடம் உள்ளது. நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாண்டி, குடிமக்களின் மனங்களை வெல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் உங்களின் தோள் மீது உள்ளது. நீங்கள் இதற்கு முயற்சிக்கிறீர்கள். ஆனால் சில நேரங்களில் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. ராணுவத்தினர் நாட்டின் குடிமக்களை தாக்கும் சம்பவங்கள் நிகழக்கூடாது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூன்று குடிமக்கள் டிச.22-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் இதுகுறித்து விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்குவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் டிசம்பர் 23-ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.