2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை: செந்தில் பாலாஜி

ஐடி ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம்கூட நான் வாங்கலை என்று கூறியுள்ளார்.

வருமான வரித்துறை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

இன்று காலை தொடங்கி வருமான வரி சோதனை எனது சகோதரர் இல்லம், உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடை உறவினர்கள் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில தொலைக்காட்சிகளும், பத்திரிக்கையினுடைய சமூக வலைதளங்களிலும் கூறப்பட்டது போல எனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

இந்த ஐடி ரெய்டு குறித்து மிக தெளிவான விளக்கங்களை திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அளித்திருக்கிறார். எனவே அவருக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத செயல்கள் குறித்தும், எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும் அண்ணன் ஆர்எஸ் பாரதி அவர்கள் மிகத்தெளிவாக விளக்கம் அளித்திருந்தார்கள். எனவே இந்த சோதனை என்பது நாம் புதிதாக எதிர்கொள்வது அல்ல. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி பிரச்சாரத்திற்கு முன்பாக இதுபோன்ற சோதனைகளை வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டோம். வாக்குப்பதிவுக்கு செல்லவிடாமல் சோதனை என்ற பெயரில் செய்தார்கள். பிரச்சாரம் செய்ய போகிறோம்.. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, எடுங்கள். முடிந்தால் வீட்டிற்கு சில் வைப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டில் பெற்றோர் முன்பாக என்ன பொருட்களை சோதனையில் கைப்பற்றினீர்கள் என்பதை கையொப்பம் இட்டு தெரிவியுங்கள்.தேர்தல் முடிந்த பின்னர் அதற்கான விளங்ககங்களை தெரிவியுங்கள் என்றோம். சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாகவும் நடைபெற்றது. இப்போதும் நடைபெறுகிறது.

எனது இல்லம் தவிர, எனது சகோதரர் இல்லம், நண்பர்கள் இல்லம், அவர்களுடைய நண்பர்கள் இல்லத்தில் சோதனை நடக்கிறது. இன்று சோதனை நடைபெறும் அனைவருமே வருமான வரியை ஏற்கனவே செலுத்தக்கூடியவர்கள். வருமான வரியை ஏமாற்றக்கூடியவர்கள் அல்ல. வருமான வரியை கட்டியவர்கள். விரும்பத்தகாத சம்பவம் நடந்தது குறித்து கேள்விப்பட்டு உடனே நான் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தொலைப்பேசியில் அறிவுறுத்தினேன். அவர்களும் கலைந்து சென்றுவிட்டார்கள். என் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சோதனை முடிந்த பின்னர் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

இன்று அதிகாலை நேரம் வீட்டிலே உறங்கி கொண்டிருந்திருக்கிறார்கள். சோதனைக்கு வந்தவர்கள் சற்றுநேரம் பெல் அடித்து காத்திருந்திருக்கலாம். ஆனால் வீட்டில் வருமான வரிசோதனைக்கு வந்தவர்கள் சற்று நேரம் காத்திருக்காமல், கதவை திறக்கும் முன்பாகவே கேட்டில் ஏறி உள்ளே சென்றிருக்கிறார்கள். அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். எனக்கு தெரிந்தவரை 40 இடங்களில் சோதனை நடந்திருப்பதாக சொல்கிறார்கள். நான் 1996ம் ஆண்டு முதல்முறையாக ஒன்றியக்குழு உறுப்பினராக சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். அன்று தொடங்கி இன்று வரை 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. குறிப்பாக கடந்த 26 ஆண்டுகளாக கரூர் மக்கள் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். எனக்கு தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரவக்குறிச்சியில் போட்டியிடக்கூடிய வாய்ப்பினை வழங்கி, அதன் தொடர்ச்சியாக கரூரில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகளை வழங்கி, வெற்றி பெறச் செய்து, அதன்பிறகு அமைச்சரவையில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் வழங்கி இருக்கிறார்கள்.

2006ம் ஆண்டில் இருந்து இன்று வரை நானோ என் குடும்ப உறுப்பினர்களோ, என் சகோதரரரோ, என் தாய் , தந்தையோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஒரு சொத்துக்கூட வாங்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு சில பேர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். என் தம்பி மனைவியினுடைய தாயார் அதாவது மாமியார், தன்னுடைய மகளுக்கு சொத்துக்களை தானாமாக கொடுத்தார். அப்படி கொடுக்கப்பட்ட இடம் என் தம்பி மனைவி பெயரில் இருக்கிறது. அங்கு தான் நீங்கள் வீடு கட்டுவதாக சொல்லப்படக்கூடிய இடம் இருக்கிறது. அது என்ன உண்மை தன்மை என்று தெரிந்து கொள்ளாமல், அது குறித்தும் சிலர் கருத்துக்களை பதிவிட்டார்கள். அதை பற்றியும் சிலர் கருத்துக்களை முன்வைத்தார்கள். எனவே என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.