மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி: திருமாவளவன்

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி என்று, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

‘மீள் சமூகங்களை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் சென்னை லயோலோ கல்லூரியின் சமூகப்பணி பிரிவு மாணவர்களுக்கான கருத்தரங்கில் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூகப்பணி துறை என்பது, பிற துறைகளில் இருந்து மாறுபட்ட ஒரு துறை. குறிப்பாக தலைவர்களையே உருவாக்குகின்ற ஒரு துறை. நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது படைப்பாளிகளை விட, ஆசிரியர்களை விட, தலைவர்கள் உருவாக வேண்டும் என்பது தான். யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியையோ, அமைப்பையோ உருவாக்கலாம். ஆனால் அப்படி பிரகடனபடுத்திக் கொள்பவர்கள் எல்லாம் தலைவர்கள் கிடையாது. தலைவர்கள் பிறரால் உருவாக்கப்படுபவர்களும் இல்லை. அன்பு, பாசம் என்ற வரையறையை தாண்டினால்தான் தலைவர்கள் உருவாவார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை என்பது மனிதர்களை நேசிப்பதுதான். போராடுகிற துணிவு உள்ளவரை சுற்றி மக்கள் ஒன்று சேர்வார்கள்.

எந்த இடத்தில் உரிமைக்கான குரல் எழுகிறதோ, அங்குதான் ஒருங்கிணைப்பு என்பது உருவாகிறது. எனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. நான் சென்னை வந்தபோது எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. நான் கல்லூரியில் படிக்கும்போதுகூட, எப்பவுமே தனியாக தான் இருப்பேன். எப்போது ஈழத்தில் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதைப்பார்த்துதான் எனக்கு அந்த உணர்வு வந்தது. இதற்கு பிறகு, மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டேன். எனவே, மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி.

தலைவர்களை உருவாக்குகிற துறை சமூகப்பணித்துறை தான். எனக்கு அப்போது இந்த துறை கிடைக்கவில்லையே என்று உங்களை எல்லாம் பார்த்து பொறாமைப்படுகிறேன். படிப்பு என்பது வேறு, மக்களிடம் நெருங்குகிறபோது, அங்கு கிடைக்கிற அனுபவமும் என்பது வேறு. மக்களுக்கு அரசியல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் உண்மையான சமூக தொண்டு. பௌத்தம் என்பது என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் பௌத்தம். இங்கு சமூக அடிப்படையில் மட்டும் பிளவு கிடையாது. சாதீய அடக்கு முறையில் பிளவு உள்ளது. இந்த பாகுபாடு கூடாது என்பதை எதிர்த்து தான் நாம் போராடி வருகிறோம். ஓட்டுப்போடக்கூடிய ஒவ்வொருவரும் அரசின், அரசியலின் அங்கம்தான். சோறு ஆக்கி கொடுப்பதோ, துணிமணி கொடுப்பதோ சமூக சேவை அல்ல. அரசியலமைப்பு என்பது இந்தியாவை கட்டமைப்பது தான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.