குழந்தையை தூங்கவைக்க.....
பத்து மாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்கு போராட்டம்தான். குறிப்பாக குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தைகளைத் தூங்க வைக்க தாய்மார்களுக்கு சில யோசனைகள்........!
குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது.
எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.
குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும், இரவில் அதைத் தவிர்க்கவும் உங்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.
சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு பவுடர் போட்டு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனத்தில் ஏற்படுத்தும்.
குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.
சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.
தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.
குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலிருந்தே அதன் தூக்கப் பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினம் ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போதுமென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம். குழந்தை தானாகத் தூங்கட்டும் என்று விட வேண்டாம். சாப்பாடு கொடுத்த சில நிமிடங்களில் தூங்க வைப்பதே சிறந்தது. தூங்குமிடம் காற்றோட்டமாக, அமைதியானதாக இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில் குழந்தையை அணைக்க வேண்டாம். குழந்தையின் தூக்கம் கெடும்.
குழந்தைகள் தூங்கும் நேரம்:
* பிறந்த குழந்தை 1 - 2 வாரங்கள் தினமும் 23 மணி நேரம் தூங்கும்.
* நாள் ஆக ஆக குழந்தை தூங்கும் நேரம் குறையும்.
* ஒரு வயதை அடையும் போது குழந்தை தினமும் 2 முறை தூங்கி எழும்.
* 1-1/2 வயதில் இதுவும் குறைந்து பகலில் ஒரு முறை தூங்கும் பழக்கம் வரும்.
குழந்தை வளர்ப்பு
- குழந்தைகளுக்கேற்ற மேக்-அப்!
- குழந்தையும் பொம்மையும்
- மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!
- குட்டீஸ்களில் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றியமையுங்கள்!
- குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்....
- குழந்தைகளின் மனதுக்குள்ளே....
- உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா? கவலைப்படாதீங்க.....
- குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அவசரப்படாதீங்க...
- குழந்தை வளர்ப்பில் அப்பாக்களும் பங்கெடுத்துக்கலாமே...
- குட்டீஸ்களின் சுட்டிகளை ரசிங்க... அடிக்காதீங்க...






