கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தேமுதிக 27-ம் தேதி உண்ணாவிரதம்!

கர்நாடக அரசை கண்டித்து வரும் 27-ம் தேதி, தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது. இதையொட்டி கர்நாடக அரசை கண்டித்தும், இவ்விவகாரத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் செப்.27-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை அருகே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகிக்க உள்ளார். இப்போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.